திருக்கழுக்குன்றத்தில் வாலிபரை வெட்டி கொன்ற வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் சர்புதீன் (34), இவர், அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், சமீப காலமாக அதேப் பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் சர்புதினுக்கும் உடனிருந்தவர்களுக்குமிடையே சில காலமாக தொழில் ரீதியாக விரோதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சர்புதீன் சென்னை உயர் நீதிமன்ற மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்ததையடுத்து கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள சில ஆக்கிரமிப்பாளர்கள், சர்புதின் மீது கோபம் கொண்டிருந்தனர்.

இது சம்மந்தமாக சிலர் சர்புதினை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தநிலையில் கடந்த சனிக்கிழமையன்று சர்புதின் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், திருக்கழுக்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை தொடர்பாக திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்த 10 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று அகமது பாஷா (34), அஷ்ரப் அலி (47), முகமது மொய்தீன் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை சம்மந்தமாக இது வரை மொத்தம் 13 பேரை கைது செய்துள்ள நிலையில் குருபாய் என்கிற ஷெரீப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் வாலிபரை வெட்டி கொன்ற வழக்கில் மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: