தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..!

டெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், அதா சர்மா. தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் வருகிற மே 5-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆனதில் இருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வெறுப்பை தூண்டும் வகையில் திரைப்படம் உள்ளதால், வெறுப்பு பேச்சு தொடர்பான மனுக்களோடு இணைத்து விசாரிக்க மனுதாரர் முறையீடு செய்தார். படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதால் முதலில் உரிய உயர் நீதிமன்றத்தை அணுக நீதிபதி கே.எம். ஜோஸப் அறிவுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

The post தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..! appeared first on Dinakaran.

Related Stories: