டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் அச்சிட்டு தருவதை நிறுத்த முடிவு: டிஜிட்டல் வடிவில் வழங்க கேரளா அரசு திட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை பிரிண்டிங் செய்து வழங்குவதை நிறுத்த மோட்டார் போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது. இவற்றை முழுக்க முழுக்க டிஜிட்டலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி வருவதால் கேரளாவில் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புத்தகங்களை பிரிண்டிங் செய்து வழங்குவதை நிறுத்த மோட்டார் போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது.

பிரிண்டிங் செய்வதற்கு அரசுக்கு பெருமளவு பணம் செலவாவதாலும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பலருக்கு சிரமமாக இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டிரைவிங் லைசன்சுக்கான பிரிண்டிங்கையும், அடுத்த கட்டமாக ஆர்சி புத்தகத்திற்கான பிரிண்டிங்கையும் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் ஒருவர் டிரைவிங் லைசன்ஸ் எடுத்தால் பல வாரங்கள் கழித்துத் தான் வீட்டு முகவரிக்கு தபாலில் லைசென்ஸ் வரும்.

ஆனால் இப்போது லைசென்ஸ் எடுக்கும் அன்று இரவே ஆதார் கார்டை பயன்படுத்தி பரிவாஹன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அதை டிஜி லாக்கரில் சேமித்து ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளலாம். இதே போல ஆர்சி புத்தகத்தையும் டிஜிட்டலாக போனில் வைத்துக் கொள்ளலாம். அதிகாரிகள் சோதனை செய்யும்போது போனில் உள்ள விவரங்களை அவர்களுக்கு காண்பிக்கலாம். அதிகாரிகள் க்யூ ஆர் கோடை பரிசோதித்து அது உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்வார்கள். இந்தத் திட்டம் விரைவில் கேரளாவில் அமலுக்கு வர உள்ளது.

The post டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் அச்சிட்டு தருவதை நிறுத்த முடிவு: டிஜிட்டல் வடிவில் வழங்க கேரளா அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: