துபாயில் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: துபாயில் உள்ள ஓட்டலில் 3 நாள் பூட்டி வைத்து மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நிவின் பாலி. தமிழில் நேரம், ரிச்சி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் நிவின் பாலி, மலையாள சினிமா தயாரிப்பாளர் சுனில் உள்பட 6 பேர் கடந்த இரு வருடங்களுக்கு முன் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் 3 நாள் பூட்டி வைத்து மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கொச்சி ஊன்னுகல் போலீசில் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் புகாரை நடிகர் நிவின் பாலி மறுத்தார்.

பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் நிவின் பாலி கேரளாவில் ஒரு சினிமா படப்பிடிப்பில் இருந்ததாக அந்தப் படத்தின் டைரக்டரான வினீத் ஸ்ரீனிவாசன் கூறினார். இதற்கிடையே தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் சதித்திட்டம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி கேரள முதல்வர் மற்றும் டிஜிபிக்கு நிவின் பாலி புகார் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு விசாரணைக் குழு போலீசார் நேற்று கொச்சியில் விசாரணை நடத்தினர். அப்போது துபாயில் வைத்து பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் தான் கேரளாவில் இருந்ததற்கான ஆவணங்களை அவர் போலீசிடம் தாக்கல் செய்தார்.

The post துபாயில் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: