காட்டரம்பாக்கம் கிராமத்தில் மாட்டு தொழுவமாக மாறிய ரேஷன் கடை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், காட்டரம்பாக்கம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த காட்டரம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2005ம் ஆண்டு கட்டப்பட்ட ரேஷன் கடையில், அப்பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த ரேஷன் கடை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால், மழைக்காலத்தில் கட்டிடத்தின் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்து, அரிசு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணானது. இதனால், இந்த ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், இந்த ரேஷன் கடை அதே பகுதியில் உள்ள நூலக கட்டிடத்தில், தற்காலிகமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், பழுதடைந்த ரேஷன் கடையில் தற்போது மாடுகள் கட்டி வைக்கும் இடமாக மாறியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காட்டரம்பாக்கம் கிராமத்தில் ரேஷன் கடை முறையாக பராமரிக்கபடவில்லை.

இதனால், பூட்டப்பட்டிருக்கும் ரேஷன் கடை பழுதடைந்து, மாடுகள் கட்டி வைக்கும் மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. எனவே, காட்டரம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்துள்ள பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்றனர்.

The post காட்டரம்பாக்கம் கிராமத்தில் மாட்டு தொழுவமாக மாறிய ரேஷன் கடை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: