நாமக்கல், மார்ச் 28: நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் -மோகனூர்ரோட்டில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், கடந்த 15ம் தேதி நாமக்கல் மாவட்ட லஞ்சஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையின்போது, கணக்கில் வராத ₹84 ஆயிரத்து 900 அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் போலீசார் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெற்றனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.