சீராக குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

வாழப்பாடி, மார்ச் 27: கோடை காலத்தில், பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டுமென, அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுறுத்தினார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, வாழப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம், மேம்பாலப் பணிகள், அரசு சட்டக்கல்லூரி கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, உரிய காலத்தில் முடிக்குமாறு, அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் சீரமைக்கும் பணிகள் குறித்தும், பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கும் பணியில் தனிகவனம் செலுத்தவும் மாநகராட்சி ஆணையரை அறிவுறுத்தினார். கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க செய்வதை, அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் செய்து உறுதிசெய்ய வேண்டும். மாவட்டத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திலும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி  ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.பி., சிவகுமார், டிஆர்ஓ மேனகா, ராஜேந்திரன்  எம்எல்ஏ, மேயர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள்  எம்எல்ஏ சிவலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்(பொ) சரவணன் மற்றும் தொடர்புடைய  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: