(தி.மலை) நள்ளிரவில் 3 கோயில்களில் கதவு உடைத்த மர்ம கும்பல் உண்டியல் பணம் திருட்டு செய்யாறு அருகே துணிகரம்

செய்யாறு, மார்ச். 25: செய்யாறு டவுன் திருவத்தூர் பகுதிகளில் உள்ள 3 கோயில்களின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் திருவத்தூரில் மூர்த்தி விக்னேஸ்வரர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில்களை அப்பகுதியைச் சார்ந்த சம்பந்தம், செல்வம், பெருமாள், சுப்பராயன் ஆகியோர் நிர்வாகித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தவுடன் மூர்த்தி விக்னேஸ்வரர், வீர ஆஞ்சநேயர் ஆகிய இரு கோயில்களையும் சம்பந்தம் என்பவர் பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை மூர்த்தி விக்னேஸ்வரர் கோயிலை திறக்க சம்பந்தம் வந்தபோது கிரில் கேட்டை திறந்துள்ளார். அப்போது உட்புறமாக இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். உண்டியல் மாதம் தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவதால் குறைந்த அளவிலான காணிக்கை மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீர ஆஞ்சநேயர் கோயிலை திறக்கச் சென்றார். அப்போது முன்பக்க கிரில் கேட்டின் பூட்டு சேதமாகி இருந்தது. அந்த பூட்டை மர்ம ஆசாமிகள் இரும்பு கம்பியால் வளைத்து உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அந்த முயற்சி கைவிட்டது தெரியவந்தது.

அதே போல் ஆற்று பாலம் டோல்கேட் அருகில் உள்ள வலம்புரி விநாயகர் கோயிலை அன்புக்கரசு மற்றும் சிலர் நிர்வாகித்து வருகின்றனர். கோயில் அர்ச்சகராக காமேஸ்வரன் பூஜைகள் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடித்து கோயிலை பூட்டிச் சென்றார். வழக்கம் போல் நேற்று காலை கோயில் சிப்பந்தி வடிவேல் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயில் வெளிப்புறத்தில் உள்ள இரும்பு கேட், இருப்பு வைப்பு அறை, இரும்பு ஷட்டர் ஆகியவற்றின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கருவறை பூட்டும் சேதமாகி இருந்தது. மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் முன்புற கேட்டின் பூட்டு உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை தேடி உள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் கருவறையின் பூட்டையும் உடைக்க முயன்றுள்ளனர். பின்னர் பொருட்கள் ஏதும் எடுக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் மூர்த்தி விக்னேஸ்வரர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், வளம்புரி விநாயகர் கோயில் ஆகிய 3 கோயில்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். டோல்கேட் அருகே உள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் ஏற்கனவே 3 முறை திருட்டு நடந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக திருட முயற்சி நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. படவிளக்கம்:

செய்யாறு திருவத்தூரில் உள்ள மூர்த்தி விக்னேஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

Related Stories: