திருவண்ணாமலை, மார்ச் 24: திருவண்ணாமலையில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் பரவலான மழையும் நீடிக்கிறது. முன்கூட்டியே கோடை மழை தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த கனமழையால், நகரின் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.