தண்டராம்பட்டு அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

தண்டராம்பட்டு, மார்ச் 24: தண்டராம்பட்டு அருகே குடும்ப பிரச்னையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தண்டராம்பட்டு அடுத்த கொட்டையூர் ஊராட்சிக்குட்பட்ட வாழவச்சனூர் பாவுச நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி மாரியம்மாள்(40). இவர்களுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். ஏழமலை மற்றும் மாரியம்மாள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், மனவேதனையடைந்த மாரியம்மாள் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த தீ காயங்களுடன் மாரியம்மாள் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாரியம்மாளை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: