திருச்சி அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை டீன் நேரு, கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் நேற்று முதல் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கண் அழுத்த நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்திற்குள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து பேரணி, வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கிற்கு வந்து சேர்ந்தது. பின்னர் கண்காட்சி அரங்கினை டீன் நேரு, திறந்து வைத்து பார்வையிட்டார்.அரங்கிற்குள் கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதை சரி செய்வதற்கான வழிமுறைகள், இயல்பாக கண்ணில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், குறித்த பல்வேறு விளக்க படங்கள் செயல்முறை விளக்கங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் டீன் நேரு, நிருபர்களிடம் கூறுகையில், பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் கட்டாயம் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு இந்த கண் நோயை குணப்படுத்தி கண் பார்வை இழப்பை தடுக்கலாம் என்றார். இதையடுத்து மருத்துவர் பார்த்திபன் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 15க்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சைக்காக வருகின்றனர்.

கண்நோய் அழுத்தம் இருப்பவர்களுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1.45 கோடி மதிப்பிலான நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள், சர்க்கரைநோய், ரத்தகொதிப்பு, தைராய்டு, உள்ளவர்கள் கட்டாயம் இந்த கண் அழுத்த நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதத்திற்கு 360 பேர் மருத்துவமனைக்கு கண் நோய் சிகிச்சைக்காக வருகிறார்கள் என்றார்.

டீன் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Related Stories: