திருச்சி: ரங்கம் கோயிலின் உபகோயிலான திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டிற்கான விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் புறப்பாடு நடைபெற்று வருகிறது.கடந்த 16ம் தேதி பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு திருவாராதனம், சூர்ணாபிஷேகம் மற்றும் நெல்லளவு கண்டருளினார். மாலை 6.30 மணிக்கு பெருமாள் தாயாருடன் பூந்தேரில் புறப்பாடாகி வீதி உலா வந்து தாயார் சந்நிதி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். 8ம் நாளான கடந்த 17ம் தேதி பெருமாள் வண்டுலூர் சப்பரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் விழாவான தேரோட்டம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை 5.30 மணிக்கு அலங்காரத்தில் பெருமாள், தாயார் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து 12.45 மணி அளவில் துவங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து இரவு தீர்த்தவாரி நடந்தது.