அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை விடுமுறை தினமான நேற்று

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிப்பதால் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. அதன்படி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 2 நாட்களாக கோயிலில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது.

அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் 13 நாளான திரயோதசி திதியன்று நடைபெறும் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. அதையொட்டி, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்திக்கு விபூதி, மஞ்சள், பால் தயிர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.  அதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சியளித்தார். அப்போது, கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பிரதோஷ நாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், அண்ணாமலையார் கோயிலில் அமைந்துள்ள மற்ற நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: