பஸ்சில் தகராறு செய்ததால் இறக்கிவிடப்பட்டார் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது

சேலம், மார்ச் 18: தாரமங்கலத்தில் ஓடும் பஸ்சில் குடிபோதையில் தகராறு செய்து பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் மாதையன் மனைவி கோகிலா (33). இவர் கடந்த 15ம் தேதி தாரமங்கலத்தில் இருந்து சேடப்பட்டி செல்ல அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் ஆளூர்பட்டி மேட்டுமாரனூரை சேர்ந்த சுரேஷ் (25) என்பவர் குடிபோதையில் பயணித்துள்ளார். அவர், கோகிலாவிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் நடத்துனர், அந்த பஸ்சில் இருந்து சுரேசை நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.

பின்னர், மேட்டுமாரனூர் பகுதியில் இறங்கிய கோகிலா, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த சுரேஷ், அவரை வழிமறித்து மீண்டும் தகராறு செய்து, தாக்கியுள்ளார். மேலும், கத்தியை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி கோகிலா, தாரமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி, குடிபோதையில் தகராறு செய்து கோகிலாவை தாக்கிய சுரேஷ் மீது கொலை மிரட்டல் விடுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சுரேசை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓமலூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories: