வந்தவாசி, மார்ச் 17: வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் நடந்த விழாவில் விவசாயிகளுக்கு உபகரண பொருட்களை கூடுதல் கலெக்டர் வீர பிரதாப் சிங் வழங்கினார்.
வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் கிராமங்களான பாஞ்சரை, கொடியாலம், தெள்ளார், சிவனம், கீழ் நமண்டி, அருங்குணம், நடுக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு சுழல் கலப்பை, நேரடி நெல் விதைப்பு கருவி, தார்ப்பாய், பேட்டரி ஸ்பிரேயர், கைத்தெளிப்பான், கடப்பாரை, மண்வெட்டி, தெளிப்பு நீர் பாசன கருவி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.குப்புசாமி, சு.வீ.மூர்த்தி, துணை வேளாண்மை அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெள்ளார் வேளாண்மை உதவி இயக்குனர் கே. குமரன் வரவேற்றார். இதில் கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், பயிற்சி கலெக்டர் ரேஷ்மி ராணி ஆகியோர் கலந்துகொண்டு 30 விவசாயிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை இலவசமாக வழங்கினர்.
அப்போது கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங் பேசியதாவது: அரசு 5 வருடங்களில் அனைத்து கிராமங்களுக்கும் வேளாண்மை திட்டங்கள் சென்று பயன்பெறும் வகையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வருடத்துக்கு 5 தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டங்கள் முழுமையாக சென்றடையும் விதமாக தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருந்து வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட வழக்கமான தேவைகளை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கி வரும் நிலையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதலாக கைத்தெளிப்பான், ஸ்பிரேயர், கடபாரை, மண்வெட்டி, தார்ப்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரண பொருட்களை வழங்கி வருவதை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.