(தி.மலை) ஒன்றிய பள்ளி நூலகத்துக்கு புத்தகம் தனியார் கல்வி மையம் சார்பில்
வந்தவாசி, மார்ச் 16: வந்தவாசி அடுத்த பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூலகத்திற்கான புத்தகங்கள் தனியார் கல்வி மைய நிர்வாகி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். வந்தவாசி தனியார் கல்வி மையம் சார்பில் பாதிரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கான அன்றாட வாழ்வியல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் முருகன் வரவேற்றார். இதில் ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன் காலை முதல் மாலை வரை மாணவர்கள் சிறப்பாக செயல்படவேண்டிய விதம் குறித்த கருத்துகளை பேசி பள்ளி நூலகத்திற்கு புத்தகத்தை தலைமை ஆசிரியை எஸ்தரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் செய்யாறு இலவச சட்டப் பணிக்குழு ஆலோசகர் வி. விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி சார்பில் நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.