அரும்பாக்கத்தில் துணிகரம் வியாபாரியை தாக்கி ரூ.6.25 லட்சம் 430 கிராம் தங்க நகைகள் பறிப்பு: 3 பேருக்கு வலை

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் பைக்கில் சென்ற வியாபாரியை தாக்கி ரூ.6.25 லட்சம், 430 கிராம் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் ஜெயின் (47). இவர், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இங்கு, தங்க நகைகளை செய்து, அவற்றை நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செய்யாறில் உள்ள ஒரு நகைக் கடையில் நகைகளை விற்பனை செய்துவிட்டு, அங்கிருந்து பஸ் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு பகுதியில் வந்தபோது,  அங்கு பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர், திடீரென ராஜேஷ்குமாரை வழிமறித்து,  அவர் வைத்திருந்த நகை பையை தருமாறு கத்தி முனையில் மிரட்டினர். அதிர்ச்சியடைந்த அவர், பையை கொடுக்க மறுத்து, ‘‘திருடன் திருடன்’’ என கூச்சலிட்டுள்ளார்.  இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ராஜேஷ்குமார் ஜெயினை சரமாரியாக அடித்து, உதைத்து, அவரிடம் இருந்த ரூ.6.25 லட்சம் மற்றும் 430 கிராம் தங்க நகைகள் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து, ராஜேஷ்குமார் ஜெயின் அரும்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதனடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பவ நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: