பொன்னை: பொன்னை அடுத்த மேல்பாடியில் ரூ.12.94 கோடி மதிப்பில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். பொன்னை அடுத்த மேல்பாடியில் ரூ.12.94 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் முன்னிலை வகித்தார். டிஆர்ஓ ராமமூர்த்தி, மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்யாநந்தம் ஆகியோர் வரவேற்றனர்.
இதில், நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தரைப்பாலம் மற்றும் பொன்னை அணைக்கட்டு புரனமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், ‘தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றி வருகிறோம். இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். தாயின் மடியாக காட்பாடி தொகுதியை பார்க்கிறேன். வருகிற நிதிநிலை அறிக்கையில் காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் அதிக பணிகள் நடைபெற்ற தொகுதி காட்பாடியாக தான் இருக்கும்’ என்றார்.