வந்தவாசி, மார்ச். 7: வந்தவாசி அருகே 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவன் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 24ம் தேதி சிறுமி வீட்டின் பின்புறமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மாணவன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை வந்தவாசி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மாணவனை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவின்படி மாணவன் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேற்று அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.