நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(3ம் தேதி) திறந்து வைக்கிறார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று(3ம் தேதி) நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை, காலை 8.45 மணிக்கு, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, சேந்தமங்கலம் வெட்டுக்காட்டில், பொன்னுசாமி எம்எல்ஏ இல்ல திருமண விழாவை நடத்தி வைக்கிறார். பகல் 11.50 மணிக்கு, நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
