நாமக்கல், பிப்.28: நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடி, கல்வி களப்பயணத்தின் வழியாக பெற்ற அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி களப்பயணம் அழைத்துச்செல்ல உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 98 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 940 மாணவ, மாணவிகள், கல்வி களப்பயணத்திற்கு 10 கல்வி நிறுவனங்களுக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த தகவல்கள் கல்லூரி பேராசியரியர்கள் விளக்கினர்.