குடியாத்தம் அருகே 2 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைய முயற்சி : வனத்துறையினர் விரட்டியடிப்பு

குடியாத்தம், பிப்.21: குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற 2 காட்டு யானைகளை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தானா உள்ளிட்ட கிராமங்களில், இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து அங்குள்ள விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது. இதனால் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் நுழைந்த 2 காட்டு யானைகள் பிளிறிக் கொண்டு அங்குள்ள விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சித்தன. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் உடனே குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்திற்குள் காட்டு யானைகள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க குடியாத்தம் வனப்பகுதிக்கு கும்கி யானையை வரவழைக்க வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: