நாமக்கல், செப்.30: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஸ்குமார் எம்பி (45). தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜேஸ்குமார் தற்போது மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு ராஜேஸ்குமார் கடுமையாக உழைத்து, கிழக்கு மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றியுள்ளார். பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும், கிழக்கு மாவட்டத்தில் 97 சதவீத வெற்றியை திமுக வேட்பாளர்கள் பெற்றனர்.
இவர் கடந்த 1996ம் ஆண்டில் திமுக உறுப்பினராக சேர்ந்தார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் கோரைக்காடு கிளை செயலாளர், வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர், ஒன்றிய பிரதிநிதி மற்றும் மாவட்ட பிரதிநிதி, 10 ஆண்டுகள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், கடந்த 96ல் திருச்சியில் திமுகவின் 8மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது முதல் அனைத்து திமுக மாநாடுகளுக்கும் பெருந்திரளாக கட்சியினரை அழைத்து சென்று பங்கேற்க வைத்துள்ளார். 2001ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த போது, சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகி சேலம் மத்திய சிறை சென்றார். 2001ம் ஆண்டு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மேம்பாலம் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட போதும், சாலை மறியலில் ஈடுபட்டு ராஜேஸ்குமார் சிறை சென்றார்.
2004 மார்ச் மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை, சட்டசபையில் அவதூறாக பேசிய அப்போதைய அதிமுக அமைச்சர்.பொன்னையன், ராசிபுரம் வரும்போது ராஜேஸ்குமார் அவருக்கு கருப்புகொடி காட்டி கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். 2012ல் நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருந்தபோது, 3000க்கும் மேற்பட்ட இளைஞர்களை பங்குபெற செய்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பாசறை கூட்டம் நடத்தினார். 2016 திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான பேரறிஞர் அண்ணா 108வது பிறந்தநாள் விழாவை, நாமக்கல் மாவட்டத்தில் நடத்தி, மு.க.ஸ்டாலினிடம் பாரட்டை பெற்றார்.மாவட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தெருமுனை கூட்டங்கள், 25க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களையும் முன்னின்று மாவட்டம் முழுவதும் நடத்தியுள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ராஜேஸ்குமார் எம்.பி. ஆற்றிய பணிகள்: ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் நிலைக்குழு கூட்டத்தில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை ₹223.30 கோடி முதல் காலாண்டுக்குள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. நாமக்கல்- திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற ராஜேஸ்குமார் எம்பி விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்கரி ₹105 கோடியில் நாமக்கல்- முசிறி இரண்டு வழிப்பாதை நான்கு வழிப்பாதையாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சித்தா ஆராய்ச்சி நிலையம், மூலிகை பண்ணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதை ஏற்று ஒன்றிய ஆயுஸ் அமைச்சர் ஆய்வு செய்வதாக அறிவித்தார். ஒன்றிய ஜவுளித்துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில் ராஜேஸ்குமார் எம்பி உரையாற்றிய அடுத்த நாளே மித்ரா டெக்ஸ்டைல் பார்க் ஒன்றிய ஜவுளித்துறை அதிகாரிகள், தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழகத்தில் ₹4,445 கோடி மதிப்பீட்டில் இந்தியாவில் அமையவுள்ள 7 மிகப்பெரிய ஜவுளிப் பூங்காவில் ஒன்றை, தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.