சென்னிமலை, செப். 24: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள எல்லைக்கிராமம் விஏஓ மூர்த்தி. இவர் நேற்று முன்தினம் மாலை தணிக்கைக்கு சென்றபோது அய்யம்பாளையம்-ஒரத்துப்பாளையம் சாலையில், சோளியம்மன் கோயில் அருகே, கீழ்பவானி வாய்க்கால் மதகு எண் 60ன் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கரையில் ஒதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக, விஏஓ மூர்த்தி சென்னிமலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு சென்ற சென்னிமலை போலீசார் சடலத்தை மீட்டு, வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சடலமாக மீட்கப்பட்டவர் திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பாறவலசு பகுதியை சேர்ந்த சுப்பராயன் மனைவி சுந்தரி (64) என்பதும், சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.