கோத்தகிரி,செப்.23: கோத்தகிரி நேரு பூங்காவில் புல் தரைகளை சமப்படுத்தும் பணி மற்றும் பூங்கா பராமரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா முக்கியமான சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது.இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனார் அம்மனூர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். காய்கறி கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.இது மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது.