கிருஷ்ணகிரி, செப்.22: பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டியில், சூலாமலை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்-ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிகளில் பர்கூர் சரகத்தில் உள்ள 48 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சூலாமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரம் மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் ஆண்கள் பிரிவில் இப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் சச்சின்குமார் முதலிடமும், பெண்கள் பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா இரண்டாம் இடமும், 10ம் வகுப்பு படிக்கும் மதுமிதா மூன்றாம் இடமும் பிடித்தனர். மேலும் 14 வயதுக்குட்பட்ட 600 மீட்டர் ஓட்டப்பந்தய பெண்கள் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஷாலினி மூன்றாம் இடம் பிடித்தார்.