திருப்பூர், ஜூலை 27:செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாநகரின் காவல் தெய்வமாக திகழும் செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம் அருகே அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு, கணபதி ஹோமம், கொடியேற்றம், சக்தி கரகம் அழைத்தல், மகாமுனி சிறப்பு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.