தா.பேட்டை, ஜூன் 7: தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வி, கோவிந்தசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அப்போது பேரூராட்சியை தூய்மையாக பராமரிப்பது, வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வாங்குதல், விழாக்கள், பண்டிகை நேரத்தில் சிறப்பு தூய்மை பணிகள், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சியை தூய்மையாக பராமரிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முகாமில் பேரூராட்சி தலைமை எழுத்தர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.