கோவை, ஏப். 23: கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் அன்றாடம் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. காரணம், மாநகராட்சிக்கு சொந்தமான லாரிகள் மற்றும் ஆட்டோக்கள் ``பிட்னஸ் சான்றிதழ்’’ (எப்.சி.) பெற சென்றுவிட்டன. பல மாதங்கள் ஆகியும் இவை மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால், குப்பை அகற்றும் பணியில் இழுபறி நீடிக்கிறது. அனைத்து வார்டுகளில் குப்பைகள் தேங்குவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.