திருப்பூர், ஏப் 22: திருப்பூர் மாநகர பகுதிகளில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் பொறுப்பேற்றதில் இருந்து மாநகர பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து தினமும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பயணிகள் ஓய்வறை, இருக்கைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு தேவைப்படுகிற வசதிகளை உடனே செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோல் இரவு நேரங்களில் இயக்கப்படுகிற பஸ்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.