ஊட்டி, ஏப்.21: கலெக்டர் அம்ரித் கூறியதாவது: இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து ஆதார், வங்கி விவரங்கள் மற்றும் நில விவரங்களை பதிவேற்றம் செய்த பின்பு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், விவசாயிகளின் வங்கி கணக்கினை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தாண்டு முதல் பதியப்பட்ட விவசாயிகளின் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு தவணை நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.