மோகனூர், மார்ச் 19: பங்குனி உத்திர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி கோயில் மேற்கு பார்த்தவாறு உள்ளது. பழநியை போல் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் சுவாமி, ஜோதிட ஞானம் வழங்க கூடிய கடவுளாக பக்தர்களால் நம்பப்படுகிறார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், காவடி, இளநீர் காவடி எடுத்து வந்தனர்.