தென்காசி, பிப்.18: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நாளை (19ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு வார்டு வாரியாக பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல்களை https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இவ்வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்தில் ‘உங்கள் ஓட்டுச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள் என்ற பகுதியை பயன்படுத்தி, வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்து, விவரங்களை அறிந்துகொள்ளலாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்ற ஏதுவாக உடல் வெப்பநிலை மானி கைகழுவும் திரவம் 100 மி.லி. மற்றும் 500 மி.லி. முகத்தடுப்பான், மூன்றடுக்கு முகக்ககவசங்கள், ஒரு முறை உபயோகப்படுத்தும் கையுறைகள், முழு கவச உடைகள் கொண்ட பெட்டகம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான சட்டமுறை சார்ந்த படிவங்கள், சட்ட முறை சாரா படிவங்கள், மிண்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், மின்கலன்கள், அழியாத மை குப்பிகள், வாக்குப்பதிவு பொருட்கள், எழுது பொருட்கள் படிவங்களுக்கான உறைகள் போன்ற 80 வகையான பொருட்கள் வாக்குப் பதிவுக்காக தயார் நிலையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் உள்ளது.