(தி.மலை) பைக்கில் தவறி விழுந்து மூதாட்டி பலி

சேத்துப்பட்டு, ஜன.28: சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மனைவி பூங்காவனம்(65). இவர் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் தனது பேரனுடன் பைக்கில் மீண்டும் நம்பேடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பேரு கிராமம் அருகே சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி பூங்காவனம் சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வையாபுரி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: