ஆரணி, ஜூலை 29: ஆரணி அருேக பச்சிளம் குழந்தையை கழுத்து நெரித்து கொன்று புதைத்த தாயை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(35), கட்டி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(28). இவர்களுக்கு, 13 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி தனது கணவரை பிரிந்தார்.
இதற்கிடையில், படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் மதிவாணன்(30) என்பவருக்கும், லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், லட்சுமி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 7ம் ேததி வேலூர் அரசு மருத்துமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால், லட்சுமி தனது குழந்தையுடன் ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள மதிவாணன் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், மதிவாணன் வெளியூர் சென்றதால் லட்சுமி குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது லட்சுமி குழந்தையை சரிவர பராமரிக்காமல், பால் கொடுக்காமல் இருந்தால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி கடந்த 22ம் தேதி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும், யாருக்கும் தெரியாமல் லட்சுமி ஒருவரிடம் ரூ.500 கொடுத்து கமண்டல நாகநதி ஆற்றில் குழி தோண்டி குழந்தையை புதைத்து விட்டு, குழந்தை தானாகவே இறந்துவிட்டதாக கூறி நாடகமாடி வந்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்த படவேடு விஏஓ ஜோதிமுருகன், சந்தவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்தது. அதன்அடிப்படையில், கடந்த 24ம் தேதி போளூர் தாசில்தார் பாலாஜி, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் முன்னிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி சட்டம் சார்ந்த மருத்துவ துறை தலைவர் சுதன்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் பிரேத பரிசோதனையில் லட்சுமி தனது பெண் குழந்தையை சுவற்றில் இடித்து கழுத்து நெரித்து கொலை செய்தது உறுதியானது. அதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் ரேகாமதி நேற்று லட்சுமியை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தார்.
