அரியலூர், ஜன.21: அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கிராமங்களில் உள்ள பொதுமக்களின் தேவைகள் அறிந்து, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இதில், கருப்பிலாக்கட்டளை ஊராட்சி வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு கிராம ஊரக வளர்ச்சி கிராம சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ.45.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேலக்கருப்பூர்-ஏலாக்குறிச்சி-கல்லக்குடி-வண்ணாரப்பேட்டை முதல் பாப்பாங்குளம் சாலை பலப்படுத்துதல் பணி, அருங்கால் ஊராட்சி, அருங்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் கிணறு கட்டுதல் பணியை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.