பட்டுக்கோட்டை, ஜன.19: கொரோனா மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியிலும் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று பட்டுக்கோட்டை கண்டியன்தெரு கணபதி நகரை சேர்ந்த சுமார் 23 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் கே.ஓ.என். பாளையம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவருக்கும், நாடிமுத்துநகரை சேர்ந்த 34 வயதுடைய ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி முழுவதையும் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் நேற்று தொற்று பாதிக்கப்பட்ட 3 பேரையும் சேர்த்து 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.