கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி. விஜயராகவன் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை மற்றும் 5 ரோடு ரவுண்டானா பகுதிகளில், உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆட்டோ ஸ்டாண்டுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட டிரைவர்களின் மொபைல் எண்களை வைத்து அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என மொபைல் ஆப் மூலம் சோதனை செய்தனர். மேலும் தடுப்பூசி போடாதவர்கள் 2 நாட்களில் போட்டுக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை ஆட்டோவின் முன்புறம் உள்ள கண்ணாடியின் இடதுபுறம் ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.