கொள்ளிடம், ஜன.11: கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழைய வகுப்பறை கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசலில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. 1981-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் 2002-ம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகின்றது. மாவட்டத்திலேயே அரசுப் பள்ளிகளில் முதன்மையான மாதிரிப் பள்ளியாக திகழ்கிறது. மேலும் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் இப்பள்ளியில்தான் 1,330 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும், ஆங்கில வழிக் கல்வியும் இப்பள்ளிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு எதிர்கால வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாகவும் விளங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சுமார் 35 வகுப்பறைகள் தேவைப்படுகின்றது. ஆனால், தற்பொழுது 16 வகுப்பறைகளில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றது. முதல் தளத்தில் அமைந்துள்ள 11 வகுப்பறைகள் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க தகுதியற்றதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் வகுப்பறைகளுக்கு செல்ல அச்சப்பட்டு வகுப்பறைகள் திறந்தவெளிப் பகுதிகளில் நடத்தப்படுகின்றன.