திருப்பூர், ஜன. 8: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் வாங்குவதற்கும் மற்றும் நிலத்தை மேம்படுத்துவதற்கும் வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தில் அதிகபட்சமாக இருக்க வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தில் அதிகபட்சமாக நஞ்சை 2.50 ஏக்கர் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவரிடமிருந்து நிலம் வாங்க வேண்டும். இத்திட்டத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது.