கூடலூர், ஜன.3: கூடலூர் நகரில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் மாலை கூடலூர் ஊட்டி சாலை இந்தியன் வங்கி பகுதியில் சிலர் போதையில் அடிதடி ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். சாலையின் நடுவில் இவர்கள் தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக கூடலூர் மைக்காமவுண்ட் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய கூடலூர் போலீசார், கூடலூர் நகர் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஸ்ரீதரன் (25), ரோஷன் (19), சிவ சந்தோஷ் (28), சங்கர் (34) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.