ஊட்டி, ஜன. 3: புத்தாண்டு மற்றும் வார விடுமுறை காரணமாக நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆங்கில புத்தாண்டு தினம் நேற்றுமுன்தினம் உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீலகிரியில் இரண்டாவது ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் வழக்கமாக புத்தாண்டு நள்ளிரவில் நடக்கும் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஊட்டிக்கு வந்திருக்க சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறைகளிேலயே முடங்கினர். புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.