தஞ்சை,டிச.27: தஞ்சை வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) ராஜகோபால் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020-21ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2020-21 ஆண்டு முதல் 2024-25 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில் துறை வாயிலாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்பட உள்ளது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனம் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்பு கூட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.