நள்ளிரவில் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து ஆயில் திருட்டு மர்ம நபர்கள் துணிகரம் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, டிச.18: தண்டராம்பட்டு அருகே நள்ளிரவில் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அதில் இருந்த ஆயிலை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவக்கொல்லை பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து, அதில் இருந்த 25 ஆயிலை திருடியுள்ளனர். பின்னர், டிரான்ஸ்பார்மரை ஆன் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

நேற்று காலை அவ்வழியாக சென்ற மக்கள் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் வாசனை ஏற்படுவது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இளநிலை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் மின்ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது, டிரான்ஸ்பார்மரில் உள்ள ஆயிலை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு பின்னர் அதனை ஆன் செய்துவிட்டு சென்றதால் முழுவதுமாக தீக்கிரையானது தெரியவந்தது. இதையடுத்து, பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும், இதுகுறித்து இளநிலை பொறியாளர் வெங்கடேசன் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதில், ₹3 லட்சம் மதிப்பிலான பொருட்களை நாசம் ஆகியுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: