நாகர்கோவில், டிச. 13: குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் அரசு ரப்பர் கழக தலைவர் சையத் முஜம்மில் அப்பாஸ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் உடனிருந்தனர். அரசு ரப்பர் கழகத்தின் கீழ் செய்யப்பட்டுவரும் பணிகள், ரப்பர் தோட்டங்கள், ரப்பர் மரங்களின் நிலை, தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து துறை அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களை நேரில் பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ரப்பர் மரத்திலிருந்து பால் எடுக்கும் முறைகள் குறித்து அலுவலர்கள், தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். ரப்பர் பால் சேமிப்பு நிலையத்தினையும் பார்வையிட்டார். கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலையில் ரப்பர் ஷீட் தயாரிக்கும் முறை, பதப்படுத்திய ரப்பர் பாலை ஆய்வகத்தில் சோதனை செய்தல், பதப்படுத்திய ரப்பர் பாலினை பேரல்களில் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, சிறப்பாக பணிபுரிந்த 2 ரப்பர் தொழிலாளர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். நிர்வாக இயக்குநர் (அரசு ரப்பர் கழகம்) தின்கர் குமார், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆஸ்டின், திராவிட மணி, அரசு ரப்பர் கழக பொது மேலாளர் குருசுவாமி, முதுநிலை கணினி மேலாளர் கருணாநிதி, கேட்சன், தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத்தலைவர் பிராங்கிளின், ரெமோன், மாதவன், குட்டிராஜன், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.