நாகை,டிச.8: நாகை மாவட்டத்தில் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள நீச்சல் குளத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் சித்திக் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருநெல்வேலியில் 15 வது மாநிலம் தழுவிய நீச்சல்போட்டி வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் கலந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நீச்சல் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் உள்ளனர். நீச்சல் வீரர்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பதினால் இளம் நீச்சல் வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டாலும் பரிசுகள் பெறுவது கடினமாக இருக்கும். எனவே நீச்சல் குளத்தை இனியும் காலதாமதம் இன்றி திறந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.