அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பிரிவு கொண்டுவர வேண்டும்

குளித்தலை, டிச.5: அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பிரிவு கொண்டுவர அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வழங்கினார். அப்போது வாகனத்தில் வந்த அமைச்சரிடம், குளித்தலை காவேரிநகர் எதிரே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு வரலாற்றுப் பிரிவு மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், நாங்கள் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பிரிவில் படிக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் 100 மாணவிகள் வரலாற்று பிரிவில் படித்து பள்ளியை விட்டு வெளியே செல்கின்றோம். ஆனால் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவு இல்லாததால் நாங்கள் திருச்சி மற்றும் கரூர் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் பொருட்செலவும், காலவிரையமும் ஏற்படுகிறது. குளித்தலை தொகுதியில் முதன்முதலாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த அரசு கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பள்ளி மாணவிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories: