கோட்டை அகழியில் உபரி நீரை வெளியேற்ற முடியமால் திணறும் அதிகாரிகள்: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கி நிற்கிறது

* கேமரா வைத்து மண் அடைப்பை ஆய்வு

* 10 அடி பள்ளம் தோண்டியும் பயன் இல்லை

ேவலூர், டிச.3: வேலூர் கோட்டை அகழியில் உள்ள உபரிநீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். 10 அடி பள்ளம் தோண்டியும் பயன் இல்லாததால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை அகழியின் நீர்மட்டம் தொடர் கன மழையின் காரணமாக அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் கோட்டையின் உள்ளே இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில் கடந்த 3 வாரங்களுக்கு மேல் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது. அதேபோல் கோயில் வளாகத்தில் உள்ள தாமரை குளம், அபிஷேக கிணறு ஆகியவையும் மூழ்கி உள்ளன. கடந்த 30ம் தேதி முதல் கோயில் கருவறையிலும் தண்ணீர் புகுந்து ேதங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவருக்கு வழக்கமான அபிஷேக, அலங்கார ஆராதனைகளை முடித்துவிட்டு உற்சவ மூர்த்திகளை ராஜகோபுரத்தின் கீழே நந்தீஸ்வரர் வாகனத்தின் மீது வைத்து பக்தர்கள் தரிசிக்க அனுமதித்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோயிலில் தேங்கியுள்ள தண்ணீரை கால்வாய் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. கோட்டை அகழியில் உள்ள உபரி தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. கோட்டை அகழியில் தண்ணீர் அதிகரித்தால் அதனை வெளியேற்றும் வகையில் 3 இடங்களில் ஷட்டருடன் கூடிய கால்வாய் ஆங்கிலேயர் காலத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக அதனை சீரமைக்காததால் கால்வாயின் இருப்பிடம் தெரியாத அளவுக்கு அவற்றின் மீது குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் உபரி நீரை உடனடியாக வெளியேற்ற வழி தெரியாமல் அதிகாரிகள் திணறினர். இருப்பினும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கால்வாயை கண்டறிந்தனர். இருப்பினும் எத்தனை அடி ஆழத்தில் கால்வாயின் ஷட்டர் உள்ளது என்பதை கணக்கிட்டு அதனை எவ்வாறு திறப்பது என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நீர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனாலும் முடியவில்லை.

மேலும் நேற்று கேமரா வைத்து கோட்டை அகழி மதகு பகுதியில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இப்பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். அப்போது கலெக்டரிடம் பேசிய மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், ‘அகழியில் உள்ள ஷட்டரை உடைக்க தொல்லியல் துறையினர் அனுமதி தர மறுத்து காலதாமதம் செய்கின்றனர். இதனால் எவ்வளவு ஆழத்தில் ஷட்டர் உள்ளது என்பதை கண்டறிவதிலும் தண்ணீரை வெளியேற்றுவதிலும் தாமதம் ஏற்படுகிறது’ என தெரிவித்தனர். அதற்கு கலெக்டர், ‘உடனடியாக தீயணைப்பு வீரர்களை வரவழைத்து ஆழம் கணக்கிட்டு வால்வை திறக்க என்ன வழி என யோசித்து திட்டமிடுங்கள் என ஆலோசனை வழங்கினார். மேலும் ஷட்டரை திறக்க முடியாத பட்சத்தில், கால்வாயின் பக்கவட்டில் துளையிட்டு அகழிநீரை வெளியேற்றலாம். இதில் தாமதம் வேண்டாம்’ என்றார்.

தொடர்ந்து அகழி நீரை வெளியேற்ற நேற்று புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள சாலையில் 10 அடி பள்ளம் தோண்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பள்ளம் ேதாண்டியதும் அகழியில் உள்ள மதகு பகுதியில் அடைப்பு இருந்தால் நீக்கும் வகையில் கம்ப்ரசர் மூலம் காற்று அழுத்தம் கொடுத்து பள்ளத்தில் நீர்கசிவு வருகிறதா என பார்த்தனர். அதிலும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால் சாலையின் குறுக்கே தோண்டிய பள்ளத்தை மூடிவிட்டனர். அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அது தோல்வியில் முடிந்து வருகிறது. இதனால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். முன்னதாக அகழி நீரை வெளியேற்றும் பணிகளை எம்எல்ஏ கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அகழியில் இருந்து உபரி நீரை வெளியேற்றினால் மட்டுமே கோயிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: