100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகம் முற்றுகை: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை ஆரணியில் பரபரப்பு

ஆரணி, ஏப்.20: ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள இரும்பேடு, சக்திநகர், ராந்தம்கொரட்டூர், புதுப்பட்டு, நெசல், சிறுமூர், மாமண்ட்டூர், காட்டுகாநல்லூர், புதுப்பாளையம், அய்யம்பாளையம், ஆகாரம், தச்சூர் ஆகிய கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மாகாந்தி தேதிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை முழுமையாக வழங்கக்கோரி பிடிஓ அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதனால் மாற்றுத்திறனாளிகள் மீண்டும் வேலை வழங்கக்கோரி மனு அளிக்க பிடிஓ அலுவலகத்திற்கு நேற்று சென்றிருந்தனர். அப்போது, பிடிஓ அலுவலக பணி சம்பந்தமாக வெளியில் சென்றிருந்தார். இதனால் மனுக்களை பிடிஓ அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். அப்போது அதிகாரிகள் மனுக்களை வாங்கமறுத்ததால், மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென பிடிஓ அலுவலகத்ததை முற்றுகையிட்டனர். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 100 நாள்களுக்கு வழங்க வேண்டிய வேலையை 40 நாட்கள் வழங்குவதை, முழுவேலை வழங்க வேண்டும்.

அதேபோல், 4 மணி நேர வேலை, முழு கூலி வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் வேலை வழங்கக்கோரி கொடுக்கும் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆரணி டவுன் போலீஸ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், மேலாளர் ரூத்தரமூர்த்தி ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட மாற்றுத்தினாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் வேலை வழங்க பிடிஓ வந்ததும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று அவர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர். ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க கோரி 320 மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி ஒப்புகை சீட்டு வழங்குமாறு கேட்டு கொண்டனர்.

Related Stories: