வந்தவாசி, ஏப்.19: வந்தவாசி அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மங்கலம் மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(54). இவரது குடும்பத்திற்கும் அதே கிராமத்தை சேர்ந்த மேத்தா ரமேஷ்(48) என்பவரது குடும்பத்திற்கும் தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. தற்போது ஊராட்சி மன்ற தலைவராக மேத்தா ரமேஷின் மனைவி கதிஜா உள்ளார்.
இந்நிலையில், சேட்டுவின் சித்தி அஞ்சலாட்சி(60) என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த 14ம் தேதி இறந்தார். இவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதனால் சடலத்தை சுடுகாட்டில் புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சடலத்தை புதைக்க ஊராட்சி தலைவரின் கணவர் மேத்தா ரமேஷ் இடையூறு செய்வதாக கூறி, கிராம விஏஓவிடம் சேட்டு தரப்பினர் புகார் செய்தாக கூறப்படுகிறது. அதன்பேரில் கடந்த 15ம் தேதி விஏஓ அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது.